கொரோனா வைரஸின் கவலைக்குரிய புதிய ஓமிக்ரோன் திரிபு கனடாவில் முதன் முதலில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஓமிக்ரோன் திரிபு வைரஸால் பாதிக்கப்பட்ட இருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை தலைநகர் ஒட்டாவாவில் உறுதிப்படுத்தப்பட்டதாக ஒன்ராறியோவின் சுகாதார அமைச்சர் கிறிஸ்டின் எலியட் உறுதிப்படுத்தினார்.
பாதிக்கப்பட்ட நபர்கள் நைஜீரியாவிலிருந்து பயணம் செய்தவர்களாவர். அவா்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவா் தெரிவித்தார்.
கொரோனா வைரஸின் கவலைக்குரிய புதிய ஓமிக்ரோன் திரிபு முதலில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. உலக சுகாதார நிறுவனம் கடந்த வாரம் புதிய திரிவு குறித்து உத்தியோகபூா்வ தகவலை வெளியிட்டது. அத்துடன், இதனை கவலைக்குரிய வைரஸ் திரிபாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.
இதனையடுத்து புதிய திரிபு தங்கள் நாட்டுக்குள் நுழையாது தடுக்கும் வகையில் பல நாடுகள் வெளிநாட்டிலிருந்து பயணிகள் தங்கள் நாடுகளுக்கு வர தடை விதித்தன.
ஓமிக்ரோன் திரிபு தொடர்பாக அச்சங்களை அடுத்து தென்னாப்பிரிக்க பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளுக்கான எல்லைக் கட்டுப்பாடுகளை கனடா விரிவுபடுத்தியது. எனினும் இந்தப் பட்டியலுக்குள் நைஜீரியா உள்ளடக்கப்படவில்லை.
ஓமிக்ரோன் திரிபில் இருந்து கனேடியர்களைப் பாதுகாக்க சிறந்த தீா்வு அது கனடிய எல்லைக்குள் நுழையாமல் தடுத்து நிறுத்துவதாகும். இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்துப் பயணிகளுக்கும் விமான நிலையத்திலேயே கொவிட் பரிசோதனைகளை மேற்கொள்ள மத்திய அரசை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறோம் என ஒன்ராறியோவின் சுகாதார அமைச்சர் கிறிஸ்டின் எலியட் கூறினார்.
ஓமிக்ரோன் திரிபு வைரஸ் மிகவும் வேகமாகப் பரவக்கூடியதென ஆரம்ப கட்ட தரவுகள் வெளிப்படுத்துவதாக கனடாவின் பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் இது தொடர்பான மேலதிக ஆய்வுகள் சா்வதேச அளவில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கனடா பொது சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.